Tuesday 29 October 2013

வலி

        வலி  உடலில் காயம்படும் போதும் உறவில் காயம்படும் போதும் உண்டாகிறது ... விபத்தினால் ஏற்படுவது தாங்கி கொள்ளமுடியாத வலி. ஏதாவது உடல் குறைபாட்டினால் செய்கிற ஒவ்வொரு செயலிலும் வலி ஏற்படுகின்ற மனிதர்களை சந்தித்திருக்கிறேன். உதாரணத்துக்கு நான் 
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் பழைய "சன்னி" வண்டியை ரொம்ப நேரமாக கிக் செய்துகொண்டிருந்தார் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை .அப்பத்தான் கவனிச்சேன் ஒரே கால் மட்டும்தான் ஓரளவுக்கு நல்லா இருக்கு ,அந்த கால் பெருவிரலில் மட்டுமே வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.அந்த பெருவிரல் வழக்கத்திற்கு மாறாக மிக பெரியதாய் அவருக்கு இருந்தது.. பிறகு நான் வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்தேன். .அப்போது வந்த ஆச்சர்யம் "நம்மால செருப்பு போடாத வெறும் காலில் கூட வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியலையே ,இவரு எப்படி வலியை தாங்கிட்டு பெருவிரலில் மட்டும் ஸ்டார்ட் செய்கிறார்,அந்த மனஉறுதி எங்கேயிருந்து வந்திருக்கும் " இப்படி வலிகள் குறித்த கேள்வி சமீபத்தில் மனதில் உழன்று கொண்டிருந்தது அதையும், சமீபத்தில் என்னை பாதித்த வலிகள் குறித்த தகவல்கள் ,அனுபவங்களையும்  பதிவு செய்திருக்கிறேன்....

வலிகளின் மீதான என் முதல் ஆச்சர்யம்
        பகவான் ரமணர் குறித்ததாகும்...பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருக்கு வந்திருந்த கேன்சர் கட்டியை நீக்கும் ஆபரேசனுக்கு ஒத்துக்கொண்டார்...இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஆபரேசனுக்கு அவருக்கு மயக்க மருந்துகள் எதுவும் கொடுக்கபடவே இல்லை..அவர் ஆபரேசனை புன்முருவலுடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
பிறகு அவரிடம் இதுபற்றி கேட்டபோது "இந்த உடல் வேறு... நான் வேறு... வலி வேறு..வலியை கவனித்தேன் காணாமல் போய்விட்டது" என்றாராம்.


வலிகளின் மீதான என் இரண்டாவது ஆச்சர்யம்
         விகடனில் வந்த மதனின் கேள்வி பதில்களில் வலிகள் குறித்த கேள்விக்கு மதன் சொன்ன பதில் " வலி இருப்பதால் தான் உங்கள் உடலில் சிறு காயம்பட்டால் கூட அந்த இடத்தை கவனித்து மேலதிக பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம்.இல்லையெனில் நம் கையை ஒருவர் வெட்டிவிட்டு போனால் கூட கவனிக்காமல் விட்டு அதிக ரத்தப்போக்கினால் மரணமடைந்து விடுவோம்...எனவே வலி என்பது "வரம்" என்று முடித்திருந்தார்.  


வலிகளின் மீதான என் மூன்றாவது ஆச்சர்யம்
           ஜெயமோகனின் "அறம்".அதில் வரும் யானை டாக்டரில் செடிகளின் ஒவ்வாமையால் வலி ஏற்பட்ட DFO ஆஃபீசரிடம் டாக்டர் சொல்லுவதாய் வரும் "ஒண்ணுபண்ணுவோமா? சொறியாமல் இருக்க முயற்சிபண்ணுங்க. அரிக்கும், அந்த அரிப்பை கூர்ந்து கவனியுங்க. என்ன நடக்குதுன்னு பாத்துண்ட்டே இருங்க " ...


            ஒரு கட்டத்தில் ஆஃபீசர் சொல்வார் "ஆமா, பசுவுவுக்கு பிரசவம் ஆறதை பாத்திருக்கேன். கண்ணைமட்டும் உருட்டிக்கிட்டு தலைய தாழ்த்தி நின்னுட்டிருக்கும்…’ யானை டாக்டர்- ‘ஆமா அவங்களுக்கு தெரியும், அதுவும் வாழ்க்கைதான்னு….மனுஷன்தான் அலறிடுறான். மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான். கைக்கு அகப்பட்டதை தின்னு அடுத்த நோயை வரவழைச்சிடறான்…மேன் இஸ் எ பாத்தடிக் பீயிங்...." என்பார்.


            அறத்திலேயே "பெருவலி" யில் தண்டுவட கேன்சரினால் பாதிக்கப்பட்ட கோமல் சுவாமினாதனிடம் ஜெயமோகன் கேட்பதாய் வரும்  ‘வலிக்கலையா சார்?’ ‘ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?’ என்பார் கோமல்


          ஜெயமோகன் சொல்வார் "வலி எப்டி இருக்கு?’ என்றேன். ’முந்தாநாள் ஞாநி வந்திருந்தார். இதையேதான் கேட்டார். அந்த கதவை திறந்து இடுக்கிலே கட்டைவிரலை வை. அப்டியே கதவை இறுக்கமூடி அழுத்தமா புடிச்சுக்கோ. அப்டியே நாளெல்லாம் வச்சுக்கோ. அப்டி இருக்குன்னேன்"-கோமல்...இந்த வலி குறித்து படிக்கையில் நம் விரலும் கதவிடுக்கில் மாட்டிய உணர்வை பெற்றிருக்கும் ,,,

 
            சென்ற கோடையில் வீட்டுக்கு நொங்கு வாங்க சென்றிருந்தேன் எனக்காக நொங்கு சீவிக்கொண்டிருந்தார்   வேகமாக சீவும்போது அருவாள் அவருடைய பெருவிரலின் சதையை வெட்டி ருசி பார்த்துவிட்டு கீழிறங்கியது..ரத்தம் .....அவர் உடனே நொங்கு சீவும்போது வரும் நீரை துடைப்பதற்கு வைத்திருந்த துணியை கிழித்து விரலை சுற்றி கட்டிக்கொண்டார் ..அவரின் மனைவியிடம் லேசான பதற்றம் ..நான் "ஏங்க டாக்டர் கிட்ட போகலையா"ன்னேன் ..."இந்த நொங்க இன்னைக்கி வித்து காசாக்கினாத்தான் நம்ம பொழப்பு ஓடும் இத அப்புறம் பார்த்துக்கலாம் சார்" என்றார் ..எனக்கும் வலித்தது .....


          வலியை தீர்மானிப்பது எதுவென தெரியவில்லை பணமா.... மனமா ...
உடலா ...என பட்டியலிட எனக்கு தெரியவில்லை .பெருவலியை சுமந்து கொண்டும், அதை கடந்துசென்றும் ஏராளமானோர் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நாம் இங்கு "லேசான காய்ச்சலுக்கே " லீவ் எடுத்துக்கொண்டு போய் டாக்டரை பார்த்துவிட்டு வருகிறோம்.அதை விட்டுத்தான் பார்ப்போமே என்று நினைப்பதில்லை ...வலியை தாங்கவும்  பழகிக்கொள்ளவேண்டும்...பிறகு சாதாரண விஷயத்துக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கையாவது குறையும் நம்மைவிட வலிகளை தாங்கிக்கொண்டு பிழைப்பவர்கள் நினைத்து நமக்கு ஏற்படுகிற பிரச்சனைகளை,வலிகளை எளிதில் கடந்துபோகிற மனோதிடம் பிறக்கும். இந்த  உலகை இயக்குபவர்கள் பெரும் வலிகளை  சுமந்து கடந்தவர்களே .....அவர்களின்றி அமையாது உலகு .......
         

Monday 14 October 2013

சாய்பாபா

சாய்பாபா


                            குங்குமத்தில் வரும் சாய்பாபா தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன் .அதில் சென்றவாரம் படித்தது "பாபா எப்போதும் ஒரே வேளை 5 வீடுகளுக்கு மட்டும்தான் பிச்சை எடுக்க செல்வராம் .அதிலேயே அவருக்கு தேவையான பிச்சை கிடைத்துவிடுமாம்.கிடைத்த சாதம்,ரொட்டி,போளி இவற்றை தட்டில் வைத்து ஒன்றாக சாப்பிடுவார்..அதிலேயே அவரும் சாப்பிட்டுவிட்டு பக்தர்களுக்கும்,காக்கை ,குருவி, நாய் போன்றவற்றுக்கும் பகிர்ந்தளிப்பராம்.சில நேரங்களில் 4 ,5 தடவை பிச்சை எடுக்கசெல்வராம்..சில நேரங்களில் நாளைக்கு 12 முறை கூட பிச்சை எடுக்க செல்வாராம் ..ஆச்சர்யம் என்னவென்றால் அன்றைக்கு அவரைப்பார்க்க நிறைய விருந்தினர்கள் (பக்தர்கள்) வருவார்கள் எல்லா உணவும் காலியாகிவிடும் "இவ்வளவு பேர் வரப்போவது பாபாவுக்கு முன்கூட்டியே எப்படி தெரியும் என்று மக்கள் ஆச்சர்யமடைவார்கள்"



                                                 பாபாவின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று

                    "யார் நாக்கை அடக்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள், உலகை வென்றவர்கள்"

இதற்கு ஏற்றாற்போல் ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது.... 

                          உடுமலைப்பேட்டையில் சாய்பாபா கோயில் ஒன்று சமீபத்தில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம்  செய்யப்பட்டது. அன்று அன்னதானமும் நடைபெற்றது.கும்பாபிஷேகம் நடந்த அன்று யாரும் எதிர்பாராத வகையில் 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்துகொண்டு அந்தவிழா மிக சிறப்பாக நடைபெற்றது..பிறகு 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெற்றது..அப்போது வாராவாரம் வியாழன் அன்று (பாபாவுக்கு உகந்தநாள் ) சிறப்பு பூஜைகள்  நடைபெறும்.அன்று நான் உட்பட நிறைய பக்தர்கள் தங்கள் சக்திக்கு தகுந்தவாறு பொங்கல்,புளியோதரை, தயிர்சாதம், கேசரி ,லட்டு ,பூந்தி, சுண்டல், பிஸ்கட், பழங்கள் போன்ற உணவு பொருட்களை பாபா முன் படைத்து பூஜை முடிந்தபின்னர் அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வினியோகிப்போம்..அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
                              இந்த கூட்டம் வியாழன் அன்று யாரும் எதிர்பாராதது. ஆனாலும் வந்திருக்கும் எல்லோருக்கும் வினியோகிக்க பிரசாதம் வந்துகொண்டே இருக்கும்.அன்று  எல்லோருக்கு பிரசாதத்தை தொண்ணையில் போட்டு தருவது வழக்கம்.எல்லாரும் சரிசமமாக வரிசையில் வந்து  பிரசாதம் வாங்க வருவார்கள்.ஒரு உள்ளங்கை அளவுள்ள தொண்ணையில் பொங்கல் புளியோதரை,கேசரி,சுண்டல் அனைத்தும் சிறிது சிறிதாக அதில் கலந்திருக்கும். யாரும் முகம் சுளிக்காமல் அதை பக்தியோடு வாங்கி சாப்பிடுவார்கள்.... வந்திருப்பவர்  2 பிஸ்கட்டாவது வாங்காமல் போகமுடியாது. அனைவருக்கும் பிரசாதம் கிடைத்துவிடும்.

                     இந்த நிகழ்வுகளை பிறகு யோசித்து பார்த்தபோது எனக்கு தோன்றியது ....

1.பாபா இப்போதும் தன்னை தேடி வருபவர்களை பசியுடன் அனுப்புவதில்லை.
2.எல்லோரையும் சரிசமமாக நடத்துகிறார்
3.எதிர்பார்க்காமல் எவ்வளவு பேர் வந்தாலும் கூட அவர்களையும் பசியுடன் அனுப்புவதில்லை
4.மேற்கூறிய "யார் நாக்கை அடக்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள் உலகை வென்றவர்கள்" தத்துவத்திற்கு ஏற்ப பக்தர்களுக்கு அனுபவத்தை தருகிறார்.
5.தானம் செய்தவருக்கு பிறருக்கு உதவிய சந்தோசத்தை அனுபவமாக தருகிறார்.


பாபா முக்தியடைந்த இந்நாளில் அவரை பற்றிய இந்த செய்தியை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி..




சாயி கவசம்
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெயஜெய சாயி நமோ நம!
சற்குரு சாயி நமோ நம!

ஓம் சாய்ராம்...!