Monday 15 July 2013

மகனுக்கு பெயர் வைத்த கதை...

                
    
                 இதுக்கு கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் ..நான் 2004-ல் வங்கியில் பணிபுரிந்தபோது எங்கள் மேனேஜர் வீட்டுக்கு போயிருந்தேன்.அவருடைய அப்போது அவரது மகனுக்கு 1 வயதிருக்கும்..குழந்தையின் பெயரை 
கேட்ட போது "துரண்யு" என்றும் அதற்கு சமஸ்கிருதத்தில் " மின்னலை விட வேகமானவன் (!)"என்று பொருள் எனவும் கூறினார்...அதை கேட்டபோது நமக்கு குழந்தை பிறக்கும்போது கொஞ்சம் வித்தியாசாமான பெயரை 
வைக்கவேண்டும் என முடிவு செய்துகொண்டேன்..இதெல்லாம் என் கல்யாணத்திற்க்கு 2 வருடங்களுக்கு முன்பு...
               திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து மனைவிக்கு  கரு ஃபெலோஃபின் டியூப்பில் (fallopian tube) உருவானதால் மனைவியை காப்பாற்ற  உடனடியாக ஆபரேசன் செய்து கருவை எடுக்க வேண்டிய நிலை...பின் ஆபரேசனும் நடந்து கரு எடுக்கப்பட்டது..இந்த சம்பவத்திற்க்கு பின் குழந்தைகள் மீதான ஆவலை தள்ளிவைத்தோம்.பின்னர் ஒருவர் சொன்னதால் "திருக்கருகாவூர்" சென்று "கர்ப்பரட்சாம்பிகை"யை வழிபட்டோம்..அடுத்தமாதமே மகன் கருவாக  தங்கினான். முதல் செக்கப் சென்றபோது நான் பார்த்தது கரு கருப்பையில் உருவாகியிருக்கிறதா என்று மட்டும்தான்...(இதற்கு முன்பும் பின்புமான என் வாழ்வு வாழ்க்கைகான போராட்டங்கள்  நிரம்பியது அது இப்ப வேண்டாம்)
               இந்த கரு உருவானவுடன் நாங்கள் முடிவு செய்தது குழந்தையின் பாலினம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளகூடாதென குழந்தையின ஆரோக்கியம் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டுமென்றும் என்று மட்டும்முடிவு செய்துகொண்டோம்.ஆனாலும் நான் எனக்கு உடன் பிறந்த சகோதரி இல்லாத காரணத்தினால் பெண் குழந்தை வேண்டுமெனவும்,மனைவி ஆண் குழந்தை வேண்டுமெனவும் ஆசைப்பட்டோம் ..இருவரும் இதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.ஏனெனில் முதல் ஏமாற்றம் எங்களை அந்த அளவுக்கு பாதித்திருந்தது...இந்த சமயத்தில் நான் முடிவு செய்தது குழந்தைக்கு வித்தியாசமான பெயர் அல்லது சுத்த தமிழ் பெயர் வைக்கவேண்டுமென..
ஆனாலும் எந்த பெயரையும் முடிவு செய்யவில்லை....
         அந்த நாளும் வந்தது , சிசேரியன் என்றபோதும் எந்த நல்ல நேரத்தையும் குறித்துகொடுக்காமல் ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் எல்லாம் எந்த நேரத்தில் சரிபட்டு வருகிறதோ அப்போதே ஆபரேசனை வைத்துக்கொள்ளுங்கள் என்று டாக்டர்களிடம் சொல்லிவிட்டேன்.18-12-2009 அன்று மாலை 5.49 க்கு என் மகன் பிறந்தான்...மகன் என்றவுடன் நான் முடிவு செய்த பெயர்
"ராம்" காரணம் ( தாத்தா ராமசாமி + ரமணர்+சாகேத்ராம் (ஹேராம்) ),
 ( ஸ்ரீராமன்+ The One )   என்ற பொருளும் அந்த பெயருக்கு உண்டு என்பதாலும் மனதுக்கு நெருக்கமான,அழைக்க எளிதான பெயர் என்பதாலும் அந்த பெயரை தேர்வு செய்தேன். ஜாதகம் குறிக்கபோன இடத்தில் ஜோசியக்காரர் 
ஒரு குண்டை போட்டார்.
                   குழந்தைக்கு பெயர்  "த" "ப"  வரிசையிலும்தான் இருக்கவேண்டுமென சொன்னார்...எனக்கு கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது.சரியென மனதை தேற்றிக்கொண்டு  நானும் என் மனைவியும் சில பெயர்களை செலக்ட் செய்தோம்.கடையாக ஃபைனல் லிஸ்டுக்கு வந்த பெயர்கள் "தனுஷ் ,தனஞ்சஜெய்,தயாநிதி,ப்ரணவ்" தனுஷ் சினிமா நடிகரின் பெயர் என்பதால் அவரை பார்த்து வைத்தது போல் தோன்றும் என்பதால் அது கழிக்கபட்டது..நான் வைக்க விரும்பிய பெயர்கள் தனஞ்ஜெய் (சூரியன் )
தயாநிதி (கருணைக்கருவூலம்  )
                     இதில் "தனஞ்ஜெய்"யை  மகன் வளரும்போது மற்றவர்கள் "தனா" என சுருக்கிகூப்பிட்டு பெண் பெயர் போல ஆகிவிடுமென கூறி நிராகரித்தார் மனைவி...பின் நான் முடிவு செய்த பெயர் "தயாநிதி"..இதற்கு வீட்டிற்க்கு
உள்ளே இருந்து மட்டுமல்ல பக்கத்து வீட்டில் இருந்து கூட எதிர்ப்பு வந்தது..காரணம் கலைஞரின் குடும்ப பெயராகஇருக்கிறதென்பதே.. "இந்த பெயர் கலைஞரின் குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல" நான் .. ஆனாலும் நான் மதிக்கும் ஒருவர்கேட்டுக்கொண்டதால் அந்த பெயர் வைக்கும் யோசனையையும் நிராகரிக்க முடிவுசெய்தேன்..நான் "D" வரிசை பெயர் வைக்க விரும்பியதன் காரணம் என்னுடைய ஸ்ரீனிவாசன் "S"-ல் ஆரம்பிப்பதால் கடைசி பெஞ்ச்தான் எப்போதும் கிடைக்கும் ,"D" வரிசை பெயர்களென்றால் முன்வரிசை கிடைத்து பாடங்களை நன்றாக கவனிக்காலாமே என்ற எண்ணம்தான்.
                  மனைவி ஆரம்பத்தில் இருந்து ஆர்வம் காட்டிய பெயர் ப்ரணவ்,தனுஷ் ,இதில் தனுஷ் நியாயமான காரணத்தினால்
கழிந்துவிட்ட பிறகு மனைவியின் சாய்ஸ் "ப்ரணவ்"...கடைசி வரிசை கன்ஃபார்ம் என்ற போதும் மனைவியின் விருப்பத்திற்கு சம்மதித்தேன்.                    "ப்ரணவ்" எனும் பெயர் "ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை குறிக்கிறது.தவிர கொஞ்சம் வித்தியாமான ஆனால் புரியும்படியான பெயர் என்பதால் அந்த பெயருக்கு இசைந்தேன்.மொத்தத்தில் மனைவியின் முடிவே கடைசியில் ஜெயித்தது.
                  பிறகு மகனின் பெயரோடு இனிசியலாக என் பெயரையும்,மனைவியின் பெயரையும் (அகிலாண்டேஸ்வரி) குறிப்பிடும்படி "S.A.ப்ரணவ்" என்றே வைத்தோம் இப்ப  நான் என் மகனை  ஆசையாக "ராமசாமி,ப்ரணவ் ராமசாமி" எனவும் அழைக்கிறேன்,என் மனைவி ப்ரணவ் எனவும் ..சில வயதான் பெரியவர்கள் அவனை பிரணாப் என அழைக்கிறார்கள்.. அவன் எல்லாப்பெயர்களையும் ஏற்றுக்கொண்டு  எங்களின் அழைப்புக்கு செவி சாய்க்கிறான் ....